வேகமாக பரவி வரும் கொரோனா எனும் கொடிய நோயின் தாக்கம் சென்னையில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கை கடுமையாக கடைபிடிக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால் வியாபாரம், கல்விக்காக சென்னை சென்ற அதிரையர்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகிறார்கள். குறிப்பாக நோய் பரவும் ஊர்களில் இருந்து இதர ஊர்களுக்கு செல்வதை தடுத்து இஸ்லாமிய தூதர் அறிவுரை கூறி இருக்கிறார்கள்.
இதனை செவி ஏற்காத சில சுயநல நபர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட தயாராகுகிறார்கள். அப்படி வருபவர்களில் குவாரண்டைன் எனும் தனிமைபடுத்தி கொள்கிறார்களா என்றால் நிச்சயமாக இல்லை. அப்படி வருபவர்களின் சிலர் கொரோனா சோதனை செய்து கொள்கின்றனர்.
அவர்களில் யாரும் முடிவு வரும் வரை குவாரண்டைன் இருக்கிறார்களா என்றால் இல்லை என்ற பதிலே மிஞ்சுகிறது. இவர்களால் பெரிய அச்சுறுத்தல் காத்திருக்கிறது என்கின்றனர் ஊர் நலனில் அக்கரை கொண்ட சிலர்.
நாலாபுறமும் நம்மை தாக்க கொரோனா எனும் கொடியவன் பதுங்கி இருக்கிறான். எனவே வெளியூர்களில் இருந்து வந்த நபர்களை நாம் தனிமைப்படுத்தி வைப்போம். அவர்களுடன் அளவளாவி கொள்வதை சில நாள் தவிர்ப்போம். கொரோனா எனும் கொடிய அரக்கனை அகிலத்தை விட்டே விரட்டுவோம்.
உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமிருக்கும் இளைஞர்களுக்கு இந்த நோய் தொற்று உயிரிழப்பு போன்ற பெரிய இடர்களை ஏற்படுத்தாது, ஆனால் நம் மூலமாக வீட்டில் உள்ள முதியவர்கள், சிறார்கள் இதனால் பாதிக்கும் நிலையை உருவாக்கி விட கூடாது என்பது தான் இப்பதிவின் நோக்கம்!