குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது சென்னை மாநகர காவல்துறை தடியடி நடத்தியது. இதில் பெண்கள் உள்ளிட்ட பலர் தடியடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வண்ணாரப்பேட்டை தடியடியை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
அதன் ஒரு பகுதியாக இன்று காலை அதிராம்பட்டினத்தில் தமுமுக மற்றும் மமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிரை தக்வா பள்ளியில் இருந்து பேரணியாக புறப்பட்டு பழைய போஸ்ட் ஆஃபீஸ் சாலை வழியாக பேருந்து நிலையம் வந்தடைந்தனர். பின்னர் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மதுக்கூர் ஷேக் தாவூது தலைமை தாங்கினார். அதிரை அனைத்து ஜமாஅத்தினர் முன்னிலை வகித்தனர். மமக-வின் மாநில அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் ஜெய்னுல் ஆபிதீன் கண்டன உரையாற்றினார்.
இதில் ஆண்கள், பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், CAA NRC NPR சட்டங்களை திரும்ப பெறக்கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.