அதிரையில் இன்று நம் சகோதரருக்கு ஏற்ப்பட்ட திடீர் மரணம் அனைவரின் மனதையும் பாதித்துள்ளது. மாரடைப்பால் ஏற்பட்ட அந்த மரண காட்சியை பார்த்து பலர் அதிர்ந்து போயிருப்பார்கள்.
தற்போது உள்ள காலகட்டத்தில், ஒவ்வொரு மனிதனும் அடிப்படை முதலுதவி சிகிச்சை குறித்து தெரிந்து வைத்திருப்பதும், அவசர காலத்தில் பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கக்கூடியவராகவும் இருப்பது அவசியமானதாகும்.
எதிர்பாராத நேரத்தில் ஏற்படும் மாரடைப்பு போன்றவற்றிற்கு அடிப்படை முதலுதவி சிகிச்சை தெரிந்து வைத்திருப்பது மிகவும் இன்றியமையாததாகும். தற்போது அடிப்படை முதலுதவி சிகிச்சையான C.P.R (ஆங்கிலத்தில் CARDIOPULMONARY RESUSCITATION) பற்றி நாம் அனைவரும் தெரிந்துகொள்வோம்.
■நெஞ்சு வலியால் மயங்கி விழுந்து, மூச்சு விட முடியாமல் மூச்சு அடைப்பட்டவருக்கு செய்யப்படும் உடனடி முதலுதவி CPR■
1. ஒருவர் நெஞ்சில் தன் கையை வைத்தவாறு மயங்கி விழுந்தால், முதலில் அவர் மயங்கி விழுந்த இடம் பாதுகாப்பானதா ? என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
2. பாதிக்கப்பட்டவர் விழுந்து கிடக்கும் முறையை பார்க்க வேண்டும். ஒருவேளை அவர்கள் குப்புற விழுந்து கிடந்தால், திருப்பி நேராக படுக்கவைக்க வேண்டும். அவர்கள் எளிதாக மூச்சு விடுவதற்கு ஏற்ற வகையில், தலையை சற்று தூக்கியவாறு வைக்க வேண்டும்.
3. உடனே பாதிக்கப்பட்டவருக்கு மூச்சு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இரு முறையில் நாம் அதனை அறியலாம். ஒன்று மூச்சு இருப்பதை கண்ணால் பார்த்து உறுதி செய்ய வேண்டும். மற்றொன்று மூச்சு இருப்பதை நாம் உணர வேண்டும்.
4. பின்னர் பாதிக்கப்பட்டவருக்கு உணர்ச்சி(Response) இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். அவர்களிடம் கேட்கவும் வேண்டும். அவ்வாறு இல்லையெனில் உடனே ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குறிப்பு : சம்பவ இடத்தில் நடப்பதை பதட்டம் இன்றி தெளிவாக 108 ஆம்புலன்ஸில் இருப்பவர்களிடம் சொல்ல வேண்டும். மேலும் ஆம்புலன்ஸ் வரும் வரை அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை ஆம்புலன்ஸில் இருப்பவர்களிடமே கேட்டு அவர்கள் சொல்கிறபடி நடந்துகொள்ள வேண்டும்.
5. ஆம்புலன்ஸ் வரும் வரை நாம் பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும்.
முதலுதவி செய்யும் முறை :
★நம் இரண்டு கைகளையும் மடக்காமல் நேராக வைத்து ஒரு கையின் மேல் ஒரு கை வைத்து, பாதிக்கப்பட்டவரின் நெஞ்சுப் பகுதியில் இதயத்திற்கு அருகில் வைத்து அழுத்த வேண்டும். இதற்கு பெயரே CPR ஆகும். அவ்வாறு அழுத்தும் போது எண்ணிக்கையை கடைபிடிப்பது சிறந்தது. சுமார் 20 அல்லது 30 முறை அவ்வாறு அழுத்த வேண்டும்.
★ பின்னர் அவர்களின் மூக்கை நம் கையால் பொத்தி, நம் வாயை வைத்து பாதிக்கப்பட்டவரின் வாய் வழியாக இரண்டு அல்லது மூன்று முறை மூச்சு கொடுக்க வேண்டும்.
★தொடர்ந்து மீண்டும் CPR முறையை தொடர வேண்டும்.
★பாதிக்கப்பட்டவருக்கு இதயத்துடிப்பு வரும் வரை இதனை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். நம்மால் செய்ய முடியவில்லையெனில்(களைப்பு ஏற்பட்டால்) அருகில் உள்ளவருக்கு சொல்லிக்கொடுத்து அவரை செய்ய சொல்லவேண்டும்.
ஆம்புலன்ஸ் வரும் வரையில் எக்காரணத்தைக்கொண்டும் இந்த CPR ஐ நிறுத்த கூடாது. நாம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும் அங்கும் இதே CPR முதலுதவி சிகிச்சையைத்தான் மருத்துவர்கள் செய்வார்கள். எனவே நாம் முன்கூட்டியே செய்வது பாதிக்கப்பட்டவரின் உயிர்காக்க உதவும்.
இவ்வாறு சுயநினைவை இழந்திருக்கக்கூடியவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுப்பதோ, அவர்களை உட்கார வைப்பதோ, உலுக்கி தொந்தரவு செய்வதோ செய்யவே கூடாது. முடிந்தவரை பாதிக்கப்பட்டவருக்கு காற்று கிடைக்கும் வரையில் சுற்றி இருப்பவர்களை அப்புறப்படுத்த வேண்டும்.
CPR முதலுதவி சிகிச்சை செய்வது மிகவும் எளிதானது. அதனை நாம் ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருப்பதும், அதனை செயல்முறையில் செய்ய தயாராக இருத்தலும் வேண்டும். ஏனெனில் அவசர காலத்தில் அதுவே ஒரு உயிர் காப்பாற்றப்பட காரணமாகவும் அமையும்!
– அஹ்லன் கலீஃபா,
மாவட்ட துணைத்தலைவர்,
கிரசண்ட் பிளட் டோனர்ஸ், தஞ்சை மாவட்டம்.
அதிரை மக்களுக்கு CPR முதலுதவி குறித்த விழுப்புணர்வு செயல்முறை பயிற்சி முகாம் விரைவில் அதிரை எக்ஸ்பிரஸ் மற்றும் கிரசண்ட் பிளட் டோனர்ஸ்(CBD) அமைப்பின் சார்பில் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.