மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள், கடந்த இரண்டு தினங்களாக எம்.பிக்களாக பதவிஏற்றனர். அவர்களுக்கு தற்கால சபாநாயகர் வீரேந்திர குமார், எம்.பியாக பதவிப் பிரமானம் செய்துவைத்தார். மாநிலங்களின் பெயர்கள் அடிப்படையில் எம்.பிக்கள் பதவிப் பிரமாணம் எடுத்தனர்.
அதன்படி, தெலங்கானா, தமிழ்நாடு எம்.பிக்கள் நேற்று பதவியேற்றனர். தெலங்கானா மாநிலம் ஹைதரபாத் தொகுதி எம்.பியாக பதவியேற்பதற்கு அசாதுதீன் ஓவைசியின் பெயர் வாசிக்கப்பட்டது. உடனே, பா.ஜ.க எம்.பிக்கள் ஜெய் ஸ்ரீ ராம், வந்தே மாதரம் என்று கோஷம் எழுப்பத் தொடங்கினர். சிரித்த முகத்துடன், தொடர்ந்து கோஷம் எழுப்புங்கள் என்பதுபோல கையை அசைத்துக் கொண்டே வந்த ஓவைசி பதவிப் பிரமாணத்தின் இறுதியில், ’ஜெய் பீம்’, ‘ஜெய் மீம்’ ‘அல்லாஹ் அக்பர்’ என்று கூறினார்.
அவர், பதவிப் பிரமானம் எடுக்கும்போதும், பா.ஜ.க எம்.பிக்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பினர். பா.ஜ.க எம்.பிக்களை சிரித்த முகத்துடன் ஓவைசி எதிர்கொண்டது பலரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவர் பதவிப் பிரமாணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.