அதிராம்பட்டினத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன் பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை அதிரையில் சிறிது நேரம் மின்தடை செய்யப்பட்ட நிலையில், பகலில் இருந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை நிலவியது. மின்தடைக்கான காரணம் குறித்து விசாரித்த வகையில், பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் மின்பாதைகளில் புதிய லைன் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், அதனாலேயே மின்தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கத்திரி வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், ரமலான் மாதத்தில் இவ்வாறு தொடர் மின்தடை செய்யப்படுவது, அதிரையர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த முதல்நாளே அதிரையில் மின்தடை ஏற்பட்டிருப்பதாக சிலர் கிண்டலடித்து வாட்ஸ்அப் செய்துவருகின்றனர்.. ஆனால் அதிகாரிகள் மட்டத்தில் விசாரித்த வகையில், இன்றைய மின்வெட்டிற்கும் திமுக ஆட்சிப்பொருப்பேற்றதற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என விளக்கமளித்துள்ளனர்.
இதனிடையே அடுத்தவாரம் நோன்பு பெருநாள் தினத்தன்று அதிரையில் மின் தடை ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.