உத்தரப்பிரதேசத்தில் அரசு அதிகாரிகள் முன்னிலையில் பொதுமக்களை நோக்கி பாஜக பிரமுகர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இளைஞர் ஒருவர் பலியானார். இச்சம்பவம் தொடர்பாக மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் ரேஷன் கடையை எங்கு ஒதுக்குவது என்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் உள்ளூர் அரசு அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.
இந்த கூட்டத்தில் இருதரப்பினரிடையே கடுமையாக வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. இருதரப்பையும் சமாதானப்படுத்த அதிகாரிகள் முயன்றனர். அப்போது உள்ளூர் பாஜக பிரமுகர் தீரேந்திர சிங் தமது துப்பாக்கியை எடுத்து கூட்டத்தை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கினார்.
இதனால் பொதுமக்கள் அங்கும் இங்கும் உயிரை பிடித்துக் கொண்டு சிதறி ஓடினர். பின்னர் பாஜக பிரமுகர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஜெய்பிரகாஷ் பால் என்ற இளைஞர் உயிரிழந்தது தெரியவந்தது. இது அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் சம்பவ இடத்தில் இருந்த அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய பாஜக பிரமுகரை கைது செய்ய போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.