தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் தற்போது 50% பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கவில்லை.
இதை தவிர்த்த பிற மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்து போக்குவரத்துக்காக தமிழ்நாடு 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. இதில் 6 மண்டலங்களுக்குள் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில், தமிழகம் முழுக்க இரண்டு மண்டலங்களை தவிர மற்ற மண்டலங்களில் பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ளது. சென்னையில் பேருந்து போக்குவரத்து தொடங்கப்படவில்லை. தமிழகம் முழுக்க சமூக இடைவெளியுடன் பேருந்து போக்குவரத்தை தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை முதல் அரசுப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பேருந்துகள் எல்லாம் சுத்தப்படுத்தப்பட்டு, முறையான விதிகள் பின்பற்றப்படுகிறது. அரசுப் பேருந்துகளில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொய்யான செய்திகள் வருகிறது. இந்த செய்திகளை நம்ப வேண்டாம்.அரசுப் பேருந்துகளில் பயணிகளிடம் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் எதுவும் இல்லை.
அரசுப் பேருந்துகளில் சோதனை முயற்சியாக Paytm மூலம் கட்டணம் வசூலிப்பது என்று முடிவு செய்து இருக்கிறோம். சில பேருந்துகளில் இந்த கட்டண முறையை கொண்டு வர இருக்கிறோம். அதன்பின் இதை விரிவுபடுத்த திட்டமிட்டு உள்ளோம். பணம் மூலம் நோய் பரவலை தடுக்க இந்த முயற்சியை எடுத்து இருக்கிறோம். அதேபோல் ஆன்லைன் பரிவர்த்தனையை ஊக்குவிக்க இப்படி செய்கிறோம்.
இந்த பேடிஎம் கட்டணம் நேரடியாக போக்குவரத்து துறையின் வங்கி கணக்கிற்கு வந்துவிடும். பேருந்து பயணிகளிடம் டிக்கெட் கட்டணம் வசூலிக்க முடிந்தவரை மின்னணு முறையை பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தி இருக்கிறோம், என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் முதல் முறையாக பேருந்துகளில் பேடிஎம் மூலம் கட்டணம் வசூலிப்பது இதுவே முதல்முறையாகும்.