தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை மேற்கு வங்கத்தில் செயல்படுத்த மாட்டோம் என அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ராஜ்யசபாவில் இன்று பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறை உச்சநீதிமன்ரத்தின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது நாடு முழுவதற்கும் நடைமுறைப்படுத்தப்படும் என்றார். ஆனால் அமித்ஷாவின் அறிவிப்புக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மமதா பானர்ஜி கூறுகையில், தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்துவோம் என்ற பெயரால் மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள்.
ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை அனுமதிக்கமாட்டோம் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
மேலும் அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையின் போது ஏன் இஸ்லாமியர்களும், இந்துக்களும், வங்காளிகளும் விடுபட்டார்கள் என்பதற்கான பதிலை பாஜக முதலில் சொல்லிவிட்டு பின்னர் நாடு முழுவதும் அமல்படுத்துவது குறித்து பேசட்டும் என்றும் கூறியுள்ளார்.
ஏற்கனவே தேசிய குடியுரிமை பதிவேடு விவகாரத்தில் அமித்ஷா- மமதா பானர்ஜி இருவரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் அமித்ஷாவுக்கு மமதா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.