ஆதார், பாஸ்போர்ட் மற்றும் வாக்காளர் அட்டை என, நாட்டில் தற்போது பல அடையாள அட்டைகள் உள்ளன. அவை முகவரி மற்றும் புகைப்பட அடையாள அட்டைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தையும் ஒரே அட்டையில் ஒருங்கிணைக்கலாம் என்பதே மத்திய அரசின் நீண்டகால திட்டம். இது மட்டுமல்லாமல், வங்கிக் கணக்கையும் இந்த அட்டையுடன் இணைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு டெல்லியில், இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரின் புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டிய பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “ஆதார் முதல் பாஸ்போர்ட் வரை ஒரே அடையாள அட்டைக்குள் கொண்டுவர வேண்டும்” என்கிற அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
கடந்த 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நாட்டின் மக்கள் தொகை 121 கோடியாக இருந்தது. எனவே 2021-ம் ஆண்டு கணக்கெடுப்பு மிகப்பெரிய பணியாக இருக்கப்போகிறது. 2021-க்குள் மக்கள் தொகை கணக்கெடுப்பானது காகித முறையிலி ருந்து டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படும். மொபைல் செயலி மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான தகவல்கள் சரியான முறையில் தானாக தகவல்கள் சேகரிக்கும் விதமாக அமைக்கப்படும். இதற்காக ரூ.12,000 கோடி செலவிடப்பட உள்ளது.
140 ஆண்டு வரலாற்றில் இது ஒரு புதிய முயற்சியாகும். ஒவ்வொருவரின் மொபைல் உதவியுடன் இந்த டிஜிட்டல் கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதனால் 2021-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த தகவல்கள் மற்றும் அறிக்கை, 2011-ம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை விட, மிகக் குறைந்த காலகட்டத்தில் வெளியிடப்படும். இதன்மூலம் ஒவ்வொரு தனிநபரின் பாஸ்போர்ட், வங்கிக் கணக்கு, டிரைவிங் லைசென்ஸ், ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்து விதமான ஆவணங்களையும் ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கும் திறன் கொண்டதாக டிஜிட்டல் கணக்கெடுப்பு இருக்கும்.
அனைத்து விதமான பயன்பாடுகள் மற்றும் சேவைகளுக்கு ஒரே விதமான அடையாள அட்டை அல்லது அடையாள ஆவணம் தேவைப்படுகிறது. அதற்கு இந்த டிஜிட்டல் கணக்கெடுப்பு முறை மூலம் தீர்வு காணத் திட்டமிடப்பட்டுள்ளது” என்றார் அவர்.