இந்தியா முழுக்க பாஜக கூட்டணி கட்சிகள் முன்னிலை வகித்து வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் அப்படியே அதற்கு எதிரான சூழ்நிலை நிலவி வருகிறது.
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. முதல் சுற்று முடிவுகள் தற்போது வரை வெளியாகி உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு போலத்தான் முடிவுகள் வந்துள்ளது.
இது எதிர்க்கட்சிகளுக்கு பெரிய அதிர்ச்சியை அளித்து இருக்கிறது. காங்கிரஸ் கட்சி இதனால் பெரிய வருத்தத்திற்கு உள்ளாகி உள்ளது.
நாடு முழுக்க 300க்கும் அதிகமான இடங்களை பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. பாஜக மட்டுமே தனியாக 260க்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று கூட ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது.
ஆனால தமிழகத்தில் நிலைமை அப்படியே வேறாக இருக்கிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி 37 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மீதம் இருக்கும் 2 இடங்களில் மட்டும்தான் அதிமுக கூட்டணி முன்னணி வகிக்கிறது. பெரும்பாலான காங்கிரஸ் உறுப்பினர்கள் தமிழகத்தில் முன்னிலை வகிக்கிறார்கள்.
தமிழகத்தில் அதிமுக வரிசையாக எல்லா எம்.பிக்களையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், தமிழகம் பாஜகவை மொத்தமாக புறக்கணித்து இருக்கிறது. திமுக கூட்டணிக்கே தமிழகம் ஆதரவு அளித்துள்ளது.
பொதுவாக கோ பேக் மோடி என்றால் எல்லோருக்கும் தமிழகம்தான் நினைவிற்கு வரும். தற்போது தேர்தலிலும் அதையே தமிழகம் செய்து காட்டி இருக்கிறது. மொத்தமாக இந்தியா முழுக்க பாஜகவிற்கு வாக்களித்து இருக்கும் போது, தமிழகம் மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்குகளை வாரி வழங்கி உள்ளது.