அதிராம்பட்டினம் காவல் நிலையம் அருகே அமைந்துள்ளது புனித பாத்திமா அன்னை ஆலயம். இங்கு கிறிஸ்தவர்கள் வழிபாடு நடத்துவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ஆலயத்தின் கண்ணாடிகள் அனைத்தும் சில விஷமிகளால் உடைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிரை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இன்று செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் ஆலயத்திற்குள் புகுந்த விஷமிகள், ஆலயத்தில் இருந்த சிலைகளை அடித்து உடைத்துள்ளனர். இது அதிரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒற்றுமையாக வாழும் ஊரில் கலவரத்தை உருவாக்கி, அதில் குளிர்காய நினைக்கும் சில சமூக விரோதிகளின் விஷச்செயலாக இருக்குமோ ? என பொதுமக்கள் மத்தியில் சந்தேகமும் அச்சமும் எழுந்துள்ளது.
எனவே ஆலயம் தாக்கப்பட்ட விவகாரத்தில் விரைந்து செயல்பட்டு சமூக விரோதிகளை அடையாளங்கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அதிரை மக்களின் விருப்பமாகும்.