கஜா புயல் பாதிப்புகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கக் கோரியும், தேசிய பேரிடராக அறிவிக்க கோரியும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில், கஜா புயலினால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 63 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மீட்பு நடவடிக்கைகள் போர் கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும், மீட்பு பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஒரு உதவி ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், புயல் வருவதற்கு முன்பே தமிழக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படகுகளை இழந்த மீனவர்களுக்கு 5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு 1401 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், மத்திய அரசின் பேரிடர் மீட்பு நிதியத்திலிருந்து தமிழக அரசிற்காக 353 கோடி வழங்க உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை டிசம்பர் 12-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அமர்வு உத்தரவிட்டது.