சென்னை: பிரதமர் மோடி சென்னை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ”கோ பேக் மோடி” (#gobackmodi)என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டிங்கில் முதல் இடம்பிடித்துள்ளது. இந்த டிரெண்டிங்கிற்கு பின் மக்களின் தொடர் போராட்டம் காரணமாக உள்ளது.
சென்னையில் நடக்கும் ”டிஃபேஎக்ஸ்போ 2018” எனப்படும் ராணுவ மற்றும் தொழில்நுட்ப கருத்தரங்கில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். நேற்று தொடங்கிய இந்த கருத்தரங்கு 14ம் தேதி வரை நடைபெறும்.
இந்த கருத்தரங்கில் ராணுவம் தொடர்பான பல முக்கிய கையெழுத்துகள் இடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் காலையில் இருந்து டிவிட் செய்யப்பட்டு வருகிறது.
பொதுவாக டிவிட்டரில் இந்திய அளவிலான டிரெண்டிங் மட்டுமே நமக்கு காட்டப்படும். ஆனால் கூகுளில் இருக்கும் சில தளங்களை தேடிப்பார்த்தால் எந்த வார்த்தை உலக அளவில் டிரெண்ட் ஆகி இருக்கிறதா என்று கண்டுபிடிக்க முடியும். தொடர்ந்து இடைவிடாமல் அந்த விஷயம் குறித்து பேசினால் மட்டுமே டிரெண்டிங்கில் அந்த வார்த்தை இடம்பெற முடியும்
இந்த டிரெண்டிங்கிற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது மோடி மீது தமிழக மக்களுக்கு இருக்கும் கோபம்தான். அதேபோல் பாஜக அரசின் தமிழக விரோத போக்கிற்கு மக்கள் கடுமையான கண்டனங்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இதைத்தான் காலையில் இருந்து தொடர்ந்து அதே டேக்கில் மக்கள் டிவிட் செய்து வந்தார்கள். அது உலக டிரெண்ட் ஆகியுள்ளது.
பொதுவாக ஒரு ஹேஷ்டேக்கில் ஒரே பகுதியில் இருந்து டிவிட் செய்தால் வைரல் ஆகாது. உலக அளவில் வைரல் ஆக வேண்டும் என்றால், பல நாடுகளில் அதை பற்றி பேச வேண்டும். உலகம் எங்கும் இருக்கும் தமிழர்கள் காவிரிக்காக குரல் கொடுத்து மோடியை எதிர்த்ததன் விளைவே இந்த டிவிட்டர் புரட்சிக்கு காரணம். 10க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த டிவிட் பற்றி பேசப்படுகிறது.
இதில் பிரபலங்களும் டிவிட் செய்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், சினிமா நட்சத்திரங்கள் இதில் டிவிட் செய்துள்ளனர். இதுவும் இந்த வைரலுக்கு முக்கிய காரணம். டிவிட்டர் டிரெண்ட் வைரல் மேப்பில், முழுக்க முழுக்க தமிழ்நாடு சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமே உலகம் முழுக்க பேசப்பட்டு இருப்பது புலனாகிறது.