திருச்சி மணிகண்டம் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட சிறுவன் சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த இளங்காகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சௌந்தர்ராஜன் என்பவரது மகன் விஜய், திருச்சி மணிகண்டம் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் முகாமில் பயிற்சி பெற்றுவந்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த விஜய் இளங்காகுறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். பயிற்சிக்கிடையே கல்லூரியின் படிக்கட்டு பக்கவாட்டில் உள்ள கைப்பிடியில் விஜய் சறுக்கி விளையாடியதாக கூறப்படுகிறது. அப்போது தவறிவிழுந்து காயமடைந்ததாக, திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு சிறுவன் விஜய் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் விஜய் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானார் என்பதை மருத்துவர்கள் உறுதிசெய்தனர்.
தலையில் அடிபட்டதில் விஜய் பலியானார் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தெரிவித்தனர். இதுகுறித்து விஜய்யின் தாயார் சரோஜா கொடுத்தப் புகாரின் பெயரில், சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து மணிகண்டம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.