இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படவிருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சுதந்திர தின விழாவில் அரசு சார்பாக பல்வேறு விருதுகள் வழங்கப்படுவது உண்டு. அந்த வகையில், கடந்த ஆண்டு ஆட்சிப்பொறுப்பேற்ற தி.மு.க அரசு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தொண்டாற்றிய மூத்த தலைவர்களைக் கௌரவிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு சார்பாக தகைசால் தமிழர் விருது ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.
அதன்படி இந்தாண்டுக்கான தகைசால் தமிழர் விருதுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முகமாக விளங்கும் 96 வயதான தோழர் நல்லகண்ணு, 1925-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தார். இவர் தன்னுடைய 18 வயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.
கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொதுவாழ்வில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட தோழர் நல்லகண்ணு, 25 ஆண்டுகள் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க தலைவராக இருந்திருக்கிறார். மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநில செயலாளராக 13 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். தற்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மத்திய கமிட்டி உறுப்பினராகவும், தேசிய கட்டுப்பாட்டுக்குழுவின் தலைவராகவும் இருக்கிறார்.
இந்தநிலையில், தகைசால் தமிழர் விருதுக்கு தமிழ்நாடு அரசால் தோழர் நல்லகண்ணு தேர்வுசெய்யப்பட்டிருப்பது, வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும் இந்த விருதினை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், சுதந்திர தினத்தன்று தோழர் நல்லகண்ணு-வுக்கு வழங்கி சிறப்பிக்கவுள்ளார்.