போக்குவரத்து துறை அமைச்சராக உள்ள ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்த ராஜகண்ணப்பன் அங்கு அசைக்க முடியாத தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த மே மாதம் திமுக ஆட்சி அமைந்ததும் அவருக்கு மிகவும் வலிமையான துறையான போக்குவரத்துத் துறை வழங்கப்பட்டது.
இந்த நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக உள்ள ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஏற்கெனவே பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சராக இருந்த எஸ் எஸ் சிவசங்கர் போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்று இவர்களின் துறைகள் மாற்றப்பட்டதாக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பு கூறுகிறது. முதுகுளத்தூரில் வட்டார வளர்ச்சி அலுவலரை ஜாதியின் பெயரை சொல்லி அமைச்சர் ராஜகண்ணப்பன் திட்டியதாக புகார் எழுந்த நிலையில் இந்த துறை மாற்றப்பட்டதாகவே பார்க்கப்பட்டது.
மேலும் அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது நிறைய புகார்கள் திமுக தலைமைக்கு போனதாக தெரிகிறது. அதில் முக்கியமானதாக பார்க்கப்படுவது, எழிலகத்தில் ரூ 35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை எழிலகத்தில் துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் துணை போக்குரவத்து ஆணையராக இருப்பவர் நடராஜன்.
இவர் தனது அலுவலகத்தில் பணிபுரியும் 30 உதவியாளர்களிடமிருந்து கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்காக தலா 5 லட்சம் வீதம் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 15 ஆம் தேதி எழிலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடந்தது. அங்கு அறையில் பணம் கட்டுகட்டாக ரூ 35 லட்சம் கைப்பற்றப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
அது போல் போக்குவரத்து துறைக்கு தீபாவளிக்கு வெளியிலிருந்து இனிப்பு வாங்கியதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இது போல் தொடர் குற்றச்சாட்டுகள் முதல்வர் ஸ்டாலினின் காதுகளை எட்டியது. இந்த நிலையில் தவறு செய்ய நினைக்கும் அமைச்சர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்பதால் ராஜகண்ணப்பனின் துறை மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.