இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த 2019 மார்ச் மாதம் விமானச் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் சில மாதங்களில் முதலில் உள்ளூர் விமானச் சேவை தொடங்கப்பட்டது. சர்வதேச விமான போக்குவரத்திற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து கொண்டே இருந்தது. ஏர் பப்பிள் முறையில் 2021 இறுதி முதல் சில சர்வதேச நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டன.
இருப்பினும், ஒட்டுமொத்த விமானச் சேவைக்கு விதிக்கப்பட்ட தடை அப்படியே இருந்தது. முன்னதாக கடந்த ஆண்டு டிசய 15ஆம் தேதி முதலில் சர்வதேச விமானச் சேவையைத் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.
அப்போது உருமாறிய ஓமிக்ரான் பரவல் திடீரென வேகமெடுத்ததால், சர்வதேச விமானச் சேவைக்குக் கொடுக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதனால் சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை தொடர்ந்தது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் சூழலில், மார்ச் 27 முதல் சர்வதேச விமானச் சேவைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகக் கடைப்பிடித்து விமானச் சேவையைத் தொடங்கலாம் என சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெளிவுபடுத்தி உள்ளது.
இதன் மூலம் சுமார் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் சர்வதேச விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.