குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவை மூலம் இந்திய முஸ்லீம் சமூகத்தின் குடியுரிமையை மத்திய பாஜக அரசு பறிக்க முயல்கிறது. இதனை கண்டித்து கடந்த 2020ம் ஆண்டு நாடு முழுவதும் தொடர் காத்திருப்பு போராட்டத்தை ஷாகின்பாக் குழுவினர் முன்னெடுத்தனர். இதேபோல் அதிரையிலும் ஜாவியா ரோட்டில் ஷாகின்பாக் குழுவினர் போராட்டத்தை நடத்தினர். இதில் இரவு பகல்பாராமல் இஸ்லாமிய சமூகத்தினர் உணர்வுபூரமாக பங்கேற்றனர். போராட்டத்தில் பச்சிளம் குழந்தைகளை கைகளில் ஏந்தி பெண்களும் கலந்துக்கொண்டனர்.
இத்தகைய சூழலில் அதிரையில் போராட்டத்தை ஒருங்கிணைத்த ஷாகின்பாக் குழுவினர் மீது 39 வழக்குகள் பதியப்பட்டது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் சிஏஏ வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் அதிரை ஷாகின்பாக் போராட்ட குழுவினர் மீதான 5 வழக்குகளை இன்னும் திமுக அரசு வாபஸ்பெறவில்லை.
இந்த வழக்குகளை தள்ளுபடி செய்யாமல் நிலுவையில் வைத்திருப்பதன் மூலம் எதை செய்ய திமுக அரசு திட்டமிடுகிறது? ஒருவேளை மத்திய பாஜக அரசை கண்டித்து அதிரையில் மீண்டும் ஷாகின்பாக் போராட்டம் நடத்த திட்டமிட்டால் அதை முன்கூட்டியே தடுக்கும் வகையில் இந்த வழக்குகளை வைத்து போராட்ட ஒருங்கிணைப்பாளர்களை கைது செய்து மிரட்ட தமிழக அரசு எண்ணுகிறதோ என்ற சந்தேகம் மக்களுக்கு எழுகிறது.