கர்நாடகாவில் பியு கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவி ஒருவரை இந்துத்துவா மாணவர்கள் சுற்றி வளைத்து கோஷம் எழுப்பிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் உள்ள பியு கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தொடர்ந்து எதிர்ப்பு எழுந்து வருகிறது. பல்வேறு கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவா மாணவர்கள் காவி நிற துண்டு அணிந்து வருகிறார்கள்.
இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்தால் நாங்களும் காவி துண்டு அணிவோம் என்று கூறி இந்துத்துவா மாணவர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். கர்நாடகாவில் இருக்கும் சிவமொக்கா, உடுப்பி, மங்களூர், சிக் மங்களூர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள பியு கல்லூரிகளில் இந்த மோதல் நிலவி வருகிறது.
இந்த நிலையில் குந்தபுராவில் உள்ள பியு கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவி ஒருவரை இந்துத்துவா மாணவர்கள் சுற்றி வளைத்து கோஷம் எழுப்பிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு வகுப்பிற்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவியை இந்துத்துவா மாணவர்கள் சுற்றி வளைத்து ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பினார். ஆனால் அந்த மாணவி அங்கிருந்து ஓடாமல்..பயமில்லாமல் அவர்களை பார்த்து அஞ்சாமல் தனியாக நின்றார்.
அங்கு மாணவர்கள் பலர் சுற்றி நின்று கோஷம் எழுப்பினாலும்..அந்த இஸ்லாமிய மாணவி தனியாக நின்று கையை உயர்த்தி அல்லாஹ் அக்பர் என்று கோஷம் எழுப்பினார். எனக்கு பயம் இல்லை என்பது போல சத்தமாக இவர் கோஷம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி உள்ளது. சக மாணவ, மாணவியர் இப்படி கர்நாடகாவில் உள்ள பியு கல்லூரிகளில் மத ரீதியாக இப்படி மோதிக்கொள்ளும் சம்பவங்கள் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.