அரசியல் என்பது ஓர் அறிவார்ந்த விசயம். அதனை அனைவரும் ஓரளவாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போது தான் உள்ளூரில் நமது உரிமையை ஊழல் பெரிச்சாளிகள் எப்படி சுரண்டி தின்று ஏப்பம்விடுகின்றனர் என்பதை தெரிந்துக்கொள்ள முடியும். 2011ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நினைவிருக்கிறதா? தேசத்தை காங்கிரஸ் வழிநடத்தியது, தமிழகத்தை அதிமுக ஆண்டது, ஆனால் அதிரையை திமுக வென்றது. காங்கிரஸ், அதிமுக அல்லாத திமுக’காரர் அதிரை பேரூர் மன்ற தலைவராக அரியணை ஏறினார். அடுத்தடுத்து வந்த 2014, 2016, 2019, 2021 மக்களவை, சட்டமன்ற பொதுத்தேர்தல்களிலும் திமுக கூட்டணிக்கே வாக்குகளை வாரி வழங்கினர் அதிரையர்கள். இதற்கெல்லாம் உள்ளூர் திமுக புள்ளிகள் காரணம் அல்ல. மாறாக பாசிச சித்தாந்தம் ஒருபோதும் வென்றுவிட கூடாது என்ற மக்களின் நல்லெண்ணமே மூலதனம். அதையெல்லாம் தற்போது காலில் போட்டு மிதித்துள்ளனர் சிறு புள்ளிகள். அதிரைக்கு தாசில்தார் தலைமையிலான தாலுக்கா அலுவலகம், தீயணைப்பு நிலையம் வேண்டுமென்றோம், ஆனால் அவர்களின் அரசியல் ஆதாயத்திற்காக கேட்காத நகராட்சியை கொடுத்துவிட்டு குழந்தையை ஏமாற்றுவதுபோல் அதிரையர்களை ஏமாற்ற முயல்கின்றனர். போதாகுறைக்கு உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்யும் வகையில் முன்னாள் தலைவர், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மீண்டும் நகர்மன்றதிற்குள் வந்துவிட கூடாது என்பதாலேயே சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்குட்பட்ட அனைத்து வார்டுகளையுமே பெண்கள் வார்டாக அறிவித்து தங்களின் அரசியல் விளையாட்டை உள்ளூர் புள்ளிகள் ஆடுவதாகவும் தகவல் உலாவருகிறது. ஒருவரை கட்டம்கட்டுவது என்பது அரசியல் கட்சிகளுக்குள் சாதாரணம். அதனை உங்களுக்குள் பேசி முடித்துக்கொள்ளுங்கள். ஆனால் அதற்காக ஓர் சமூகத்தையே தங்கள் இஷ்டத்திற்கு ஆட்டி வைக்க முயலாதீர். ஏனெனில் அந்த சமூகம் பகுத்தறிவு இல்லாத அடிமை கூட்டமல்ல, உரிமைக்காக வீதியில் இறங்கி வெற்றியை சுவைக்கும் பட்டாளம்.