வங்கக் கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெருவதன் காரணமாக நவம்பர் 10,11ஆம் தேதிகளில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை, கடலூர், டெல்டா மாவட்டங்களில் 20 செமீ அளவிற்கு மழை பதிவாக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு வங்ககடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. நாளை தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்கக் கூடும். இதன் காரணமாக நாளை மற்றும் நாளை மறுதினம்(9,10) ஆகிய தேதிகளில் சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், நவம்பர் 10ஆம் தேதியன்று டெல்டா மாவட்டங்கள், கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஒரு சில இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் புவியரசன் தெரிவித்துள்ளார். வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நவம்பர் 11 ஆம் தேதி கடலூர், விழுப்புரம், சென்னை, புதுச்சேரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், டெல்டா மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யலாம்.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். 12ஆம் தேதி வட தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
இன்று(8/11/21) முதல் 11ஆம் தேதி வரை தெற்கு ஆந்திர மற்றும் தமிழக கடற்கரை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டி இலங்கை கடற்கரை பகுதிகள், குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இன்று மற்றும் நாளை தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நவம்பர் 9 மற்றும் 10ஆம் தேதியன்று தெற்கு வங்கக்கடல், மத்திய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இன்று மற்றும் நாளை மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் 9 ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்பி வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் புவியசரன் கூறியுள்ளார்.