தமிழகத்தில் 19 மாதங்களுக்கு பிறகு நவம்பர் 1 ஆம் தேதி, முதல் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை திறக்கப்படும் நிலையில் அவர்களுக்கு இனிப்பு, மலர் கொத்து கொடுத்து வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா பரவல் ஆரம்பித்ததன் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. அதன் பிறகு முதல் அலை முடிந்து இரண்டாவது அலை தொடங்கியது. அப்போது இருந்த அதிமுக ஆட்சி 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறந்தது.
ஆனால் 2ஆம் அலை உச்சத்தில் இருந்ததால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா பரவல் குறைந்து காணப்படுவதால் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 – 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.
இதையடுத்து நாளை முதல் 1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதில் ஒரு சில தனியார் பள்ளிகள் பெற்றோரிடம் கருத்து கணிப்பை நடத்தி வரும் நவம்பர் 8ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு அதாவது கிட்டதட்ட 19 மாதங்களுக்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கு செல்வதால் அவர்களை உற்சாகப்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து எம்பி, எம்எல்ஏக்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் பள்ளிக் கூடங்களுக்கு சென்று வரவேற்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி நாளை அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிக் கூடங்களில் மாணவ- மாணவிகளுக்கு இனிப்பு, மலர் கொத்து கொடுத்து வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் சைதாப்பேட்டை மாந்தோப்பில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சென்று மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு மலர் கொத்து கொடுத்து வரவேற்கிறார். அது போல் அமைச்சர் சேகர் பாபு, சென்ட்ரல் அருகே வால்டாக்ஸ் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு, பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்.
அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், ஆவடி டி.எஸ்.பி. அலுவலகம் பின்புறம் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு சென்று மாணவ-மாணவிகளை வரவேற்கிறார். அங்குள்ள காமராஜர் நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கும், அரசு உயர்நிலை பள்ளிக்கும் சென்று மலர் கொத்து, இனிப்புகள் கொடுத்து வரவேற்க உள்ளார். இது போல் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களை வரவேற்கிறார்கள்.
நீண்ட நாட்கள் கழித்து சிறு பிள்ளைகள் பள்ளிகளுக்கு வருவதால் முதல் 15 நாட்களுக்கு கதை, பாடல் , விளையாட்டு, ஓவியம் வரைந்து வர்ணம் தீட்டுதல், கலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளை செய்ய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. மேலும் மாணவர்கள் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.