ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்தவர் தப்ரெஸ் அன்சாரி. இவர் கடந்த வாரம் 18-ம் தேதி தன் நண்பர்களுடன் ஜாம்ஷெட்பூரில் இருந்து கர்சவான் பகுதிக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தார். வீட்டிலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் வந்துகொண்டிருக்கும்போது இவர் கடுமையாகத் தாக்கப்பட்டார். ஒரு கும்பல் இவரைத் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
அன்சாரி, ஒருவரின் இரு சக்கர வாகனத்தை திருடியதாகக் பொய் குற்றச்சாட்டு கூறி அவரை மரத்தில் கட்டிவைத்து 11 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. சுமார் 7 மணி நேரம் வரை அந்தக் கும்பல் அன்சாரியை அடித்துள்ளது. இதற்கிடையில், அவரை `ஜெய் ஸ்ரீராம்’ எனச் சொல்லும்படியும் அந்தக் கும்பல் வற்புறுத்தியுள்ளது.
இறுதியாக அன்சாரி மயங்கிய பிறகே போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் இருந்த அன்சாரி கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனி ஒருவரை 11 பேர் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் பற்றி பேசிய அன்சாரியின் மனைவி, “என் கணவர் இஸ்லாமியர் என்பதால் கருணையே இல்லாமல் தாக்கப்பட்டுள்ளார். எனக்கு உறவினர்கள் யாரும் கிடையாது, அண்ணன், தம்பிகள் என்றும் யாரும் இல்லை. எனக்கு ஒரே உறவாக இருந்தது என் கணவர் மட்டும்தான். அவரையும் இழந்து தற்போது நான் தனியாக இருக்கிறேன். என் கணவர் கொல்லப்பட்டதற்கு நீதி கிடைக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக ஜெய் ஸ்ரீராம் என்று கூறவேண்டும் என இஸ்லாமியர்கள் தாக்கப்படுவதும், அடித்து துன்புறுத்தப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. இதனை தடுக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள் கைகட்டி வேடிக்கை பார்ப்பது மதச்சார்பற்ற இந்தியாவிற்கு அழகல்ல.