சவூதிக்கு உம்ரா சென்றபோது விபத்தில் மரணமடைந்த சென்னை இளைஞருக்கு 3 ஆண்டு சட்டப் போராட்டம் மூலம் ரூ.50 லட்சம் இழப்பீடு!
கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ம் தேதியன்று, அபுதாபியில் பணிபுரிந்து வந்த சென்னையை சேர்ந்த பத்ருதீன் என்பவர் அவருடைய மனைவி மற்றும் குழந்தையுடன் சாலை மார்க்கமாக பேருந்து மூலம் மக்கா நோக்கி புனித உம்ரா பயணம் சென்றபோது, சவூதி அரேபியாவின் அல்ஹசா அருகில் சல்வா என்ற இடத்தில் டிரக்குடன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் உயிரிழந்தார்.
இந்நிகழ்வு குறித்த தகவல் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகளுக்கு தெரியவரவே அவர்கள் உடனடியாக சவூதியில் இந்தியர்களின் நலனுக்காக செயல்பட்டு வரும் சமூக சேவை அமைப்பான இந்தியன் சோசியல் ஃபோரம் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளை தொடர்புகொண்டு மேற்படி குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்ய கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து விபத்தில் மரணமடைந்த பத்ருதீனின் மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் இந்தியன் சோசியல் ஃபோரத்தின் அல்ஹசா ஒன்றிய தலைவர் ஜின்னாஹ் அவர்களின் பாதுகாப்பில் வைக்கப்பட்டு, பின்னர் ரியாத் வழியாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பத்ருதீன் உடல் அல்ஹஸாவில் இந்தியன் சோசியல் ஃபோரம் முயற்சியால் விபத்து நடந்த நான்காவது நாளில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், இறந்தவரின் விபத்து இழப்பீடு பெறுவதற்காக வழக்குகள் நடத்தப்பட்டு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட பின்னரும் கூட அது தோல்வியில் முடிவடைந்ததையடுத்து, அந்த வழக்கை ஏற்று, தேவையான சட்டப் போராட்டம் மூலம், இறந்த பத்ருதீன் குடும்பத்தினருக்கு இழப்பீடு பெற்றுத்தர இந்தியன் சோசியல் ஃபோரத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கோரிக்கையை ஏற்று, கடந்த 2019, ஆகஸ்ட் 05 அன்று இந்தியன் சோசியல் ஃபோரம் அல்ஹசா ஒன்றிய தலைவர் ஜின்னாஹ் மூலம் வழக்கு முறையீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த வழக்கு காலாவதியாகிவிட்டதாக நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. இருப்பினும் இறந்தவரின் குடும்ப நிலைகளை விவரித்து, திரும்பவும் வழக்கை விசாரிக்க கோரிக்கை வைத்ததை அடுத்து நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஏற்றது. கிட்டத்தட்ட 3 ஆண்டு சட்டப் போராட்டத்துக்குப் பின்னர் 2021 மே 31 அன்று விபத்துக்கான இழப்பீடாக இந்திய மதிப்பில் ரூ. 50 லட்சம் கிடைக்கப் பெற்றது. அதனை அவரது குடும்பத்தாருக்கு இஸ்லாமிய முறைப்படி பகிர்ந்து அளிக்கப்பட்டது.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கோரிக்கையை ஏற்று, இந்த வழக்குக்காக சட்டப் போராட்டம் நடத்தியும், பலமுறை அல்ஹஸா நீதிமன்றம், தம்மாம் இந்திய தூதரகம், காப்பீடு நிறுவன அலுவலகம் என அலைந்து இறைவனின் உதவியால் வழக்கை முடித்து கொடுத்த இந்தியன் சோசியல் ஃபோரத்திற்கும், அதன் அல்ஹஸா ஒன்றிய தலைவர் ஜின்னாஹ் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
–