கொரோனா தடுப்பூசிகள் விவகாரம், சமூக ஊடகங்களில் உதவிகள் கோரினால் நடவடிக்கைகள் எடுப்பது ஆகியவற்றை முன்வைத்து சரமாரியான கேள்விகளை உச்சநீதிமன்றம் நேற்று எழுப்பியுள்ளது.
கொரோனா தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்குகளை விசாரித்து வருகிறது.
நேற்றைய வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள்- முன்வைத்த விமர்சனங்கள் :
கொரோனா தடுப்பூசி தொடர்பான ஆராய்ச்சி, மேம்பாட்டில் மத்திய அரசு என்னதான் பங்களிப்பு செய்துள்ளது ? புதிய வகை கொரோனா வைரஸை தற்போதைய பரிசோதனையில் கண்டறிய முடியாது எனில் புதிய ஆராய்ச்சி என்ன மேற்கொள்ளப்பட்டிருக்கிறது ?
கொரோனா தடுப்பூசிக்கான விலையை தயாரிக்கின்ற தனியார் நிறுவனங்கள் எப்படி நிர்ணயிக்கின்றன ? அமெரிக்காவில், ஐரோப்பாவில் 1 டாலருக்கு தடுப்பூசிகள் விற்பனையாகும் போது இந்தியாவில் ரூ. 400க்கு விற்பனை செய்வது எந்த வகையில் நியாயமாகும் ?
கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட மருத்துவ தேவைகளை அனைத்தையும் மத்திய அரசுதான் கொள்முதல் செய்ய வேண்டும். மாநிலங்களின் தேவைகளுக்கு ஏற்ப இவற்றை மத்திய அரசுதான் விநியோகிக்க வேண்டும். கொரோனா தடுப்பூசிகளின் உற்பத்தியை அதிகரிக்க என்னதான் நடவடிக்கை எடுத்தது மத்திய அரசு? கொரோனா தடுப்பூசி விநியோகத்தின் கட்டுப்பாடு அனைத்தும் மத்திய அரசிடம்தான் இருக்க வேண்டும்.
அத்துடன் சமூக வலைதளங்களில் ஒருவர் உதவி கேட்கிறார் எனில் அவர் தவறான தகவலை பரப்புகிறார் என்று எப்படி சொல்ல முடியும் ? சமூக வலைதளங்களில் உதவி கேட்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள்தான் பாயும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
அண்மையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசுதான், சமூக வலைதளங்களில் உதவி கேட்டவர்கள் மீது வழக்கு போட்டது. இப்போது உச்சநீதிமன்றம் விடுத்துள்ள எச்சரிக்கையானது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசுக்கானதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.