தமிழகத்தில் எடுக்க வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய்த்துறை, வருவாய் நிர்வாக ஆணையர், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கொரோனா தடுப்புக்காக கடும் நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
முழு ஊரடங்கு இல்லாவிட்டாலும், இரவு நேர ஊரடங்கு, திரையரங்குகளுக்கு கட்டுப்பாடு உள்ளிட்ட பல நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில், முழு ஊரடங்கு விதித்தால் அது சாமானியர்கள் வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும் என்பதை அரசு உணர்ந்துள்ளது.
இந்த நிலையில்தான், தமிழ்நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு என பரவும் தகவல் பொய்யானது. கொரோனா பரவலை தடுக்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று சுகாதாரத்துறை இன்று காலை தெரிவித்திருந்தது. தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் வகையிலான அறிவிப்புகளை இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.
இரவு நேர ஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியிடப்படலாம் என்றும், மால்கள், திரையரங்குகள், சந்தைகள், உணவகங்கள், பொது நிகழ்ச்சிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.