நாளை தமிழகத்தில் சட்டசபை வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில் இன்று அவர் அதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அப்போது கூறியதாவது:
தமிழகத்தில் காலை 7 முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். தமிழக சட்டசபை தேர்தலில் ஒட்டுமொத்தமாக 6.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியுள்ளவர்களாகும். இவர்கள் வாக்களிக்க 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் உள்ளது. 50 சதவீத வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.
வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படு பிறகு வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஒருவேளை, உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால், அவர் மாலை 6 மணிக்குப் பிறகு வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா நோயாளிகள் வாக்களிக்க பிபிஇ கிட் பாதுகாப்புக் கவசம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடைசி ஒரு மணி நேரத்தில் அதாவது மாலை 6 மணிக்குப் பிறகு, அவர்கள் பிபிஇ கவச உடை அணிந்து வாக்களிக்கலாம்.
சட்டசபை தேர்தலில் ஒட்டுமொத்தமாக 4,17,521 தேர்தல் பணியாளர்கள் ஈடுபடுவார்கள். வாக்குச்சாவடியில் எத்தனை பேர் வரிசையில் நிற்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதைப் பார்த்து அறிந்து கொண்டு வாக்களிக்கச் செல்லலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் போதும், வாக்காளர் சீட்டு இல்லாவிட்டாலும் வாக்களிக்கலாம். வாக்குப்பதிவு தொடர்பான தகவல்களை பெற 1950 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.