மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட செங்கல்லை உதயநிதி ஸ்டாலின் திருடிவிட்டதாக பா.ஜ.க நிர்வாகி புகார் அளித்துள்ளார்.
தி.மு.க வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தீவீரமாக ஈடுபட்டு வருகிறார். அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணிக்கு எதிராக பல்வேறு யுக்திகளை தனது பரப்புரையின் மூலம் வெளிப்படுத்தும் அவர், சமீபத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை மையமாக வைத்து செய்த பரப்புரை வைரலானது.
மதுரையில் 3 வருஷத்துக்கு முன்னாடி அ.தி.மு.க - பா.ஜ.க அரசுகள் மதுரையில எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிக் கொடுத்தாங்க. உங்களுக்கு நியாபகம் இருக்கா? அத நான் கையோட எடுத்துக்கிட்டு வந்திருக்கேன்” என்றவர், செங்கல் ஒன்றை எடுத்துக் காட்டினார்.
இது தான் அவங்க கட்டிக் கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை” என்று கூற கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது.
இந்தநிலையில், எய்ம்ஸ் கட்டப்படவிருக்கும் வளாகத்தில் இருந்து உதயநிதி ஸ்டாலின் செங்கல்லை திருடிவிட்டார் என்று பா.ஜ.க நிர்வாகி ஒருவர் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து கோவில்பட்டி காவல் நிலையத்தில் பா.ஜ.க நிர்வாகி நீதிப்பாண்டியன் என்பவர் கொடுத்துள்ள புகாரில், “ மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்க்காக பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களால் கடந்த 27.01.2019ம் தேதியில் அடிக்கல் நாட்டப்பட்து. அதனைத் தொடர்ந்து கடந்த 01.012.2020ம் தேதியன்று பூமி பூஜையுடன் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 5.50 கிலோ மீட்டர் சுற்றளவில் சுற்றுச் சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
சொத்தின் பாதுகாப்புக்காக கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை சுற்றுச் சுவர் வளாகத்திற்க்குள் இருந்து செங்கல்லை தி.மு.க-வின் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருடியிருக்கிறார். இந்த உண்மையை அவரே நேற்று (25.03.2021) விளாத்திகுளம் பேருந்து நிலையத்திற்க்கு முன்பு நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் ஒப்புக் கொண்டதோடு மட்டுமல்லாமல் தான் திருடி கொண்டு வந்த அந்த செங்கலையும் அங்கே கூடியிருந்த பொது மக்களிடத்தில் எடுத்து காண்பித்தார்.
அவரின் இத்தகையை செயல் இந்திய தண்டனை சட்டம் பிரிவு
380-ன் படி தண்டிக்கத் தக்க குற்றச் செயலாகும். ஆகவே இந்த புகார்மனு மீது விசாரணை செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து அவர் திருடி வந்த செங்கல்லை கைபற்றி சட்டப்படி தண்டனை பெற்று தந்திட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று புகார் தெரிவித்துள்ளார்.