ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான 6 நாடுகள் தீர்மானம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. ஆனால் இத்தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய அரசு ஏற்காதது மன்னிக்க முடியாத துரோகம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாடியுள்ளார்.
இலங்கை இறுதி யுத்தத்தின் போது சிங்கள ராணுவம் நிகழ்த்திய போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணை தேவை என்பது உலகத் தமிழர்களின் கோரிக்கை. இதனையே சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்களும் வலியுறுத்துகின்றனர்.
இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டங்களில் தீர்மானங்கள் கொண்டுவருவதும் அதில் இலங்கை தொடர்ந்து வெற்றி பெறுவதும் வாடிக்கையான ஒன்று.
இந்த நிலையில் தற்போதைய ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில் பிரிட்டன் உட்பட 6 நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தன.
அதாவது மனித உரிமை மீறல்களை இலங்கை விசாரித்துதான் ஆக வேண்டும் என்பதுதான் இந்த தீர்மானத்தின் சாராம்சம். இதன் மீதான வாக்கெடுப்புக்கு ஆதரவாக 21 நாடுகள் ஓட்டளித்தன. இலங்கையில் அப்படி ஒரு விசாரணையே தேவை இல்லை என சீனா, பாகிஸ்தான் உட்பட 11 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன.
இந்தியா, ஜப்பான் உட்பட 14 நாடுகள் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இத்தனைக்கும் இன்று காலை ராஜ்யசபாவில், இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை வலியுறுத்தினார். தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், இந்த விவகாரம் பிரச்சனையாகும் என்பதை யூகித்தே அதிமுக இதனை சுட்டிக்காட்டியது.
முன்னதாக தமிழக அரசியல் தலைவர்களான ப. சிதம்பரம், ஸ்டாலின், வைகோ, அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்தனர். ஆனாலும் தமிழகத்தின் குரலுக்கு மத்திய அரசு செவிவாய்க்காமல் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளது. இது தமிழருக்கு மோடி அரசு செய்த மன்னிக்க முடியாத துரோகம் என்கிறார் மதிமுக பொதுச்செயலர் வைகோ.