தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. 500- க்கும் கீழே இருந்த கொரோனா பாதிப்புகள், கடந்த சில நாட்களாக 800-க்கும் மேல் சென்று விட்டது. சென்னையிலும் பாதிப்பு உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் நேற்று மட்டும் 867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 61 ஆயிரத்து 429 ஆக உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 28,903 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 188 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக உயரக்கூடும் என்று எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ” தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா உட்பட 19 மாநிலங்களில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் இரண்டாம் அலை வீசுவதாக கூறுகின்றனர். ஆனால் மீண்டும் பரவல் அதிகரித்துள்ளது என்பது உண்மை.
தமிழகத்தில் தேர்தல் வருவதால், பல அரசியல் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இதுபோன்ற அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்வோர் மாஸ்க் அணிவதில்லை. இதனால், மீண்டும் கொரோனா தமிழகத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனை அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தான் கண்காணிக்க வேண்டும். மூடிய அறையில் கூட்டம் நடக்கிறது என்றால் 600 பேர் தான் இருக்க வேண்டும். திறந்தவெளி மைதானத்தில் கூட்டம் நடைபெறுகிறது எனில், அந்த இடத்தின் 50 சதவிகித இடத்தில் மட்டும் ஆட்கள் இருக்க வேண்டும். மேலும், குடும்ப நிகழ்ச்சிகளாலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது.
எனினும், கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் டெங்கு பாதிப்பு தற்போது குறைவாகவே உள்ளது. எனினும், எந்த வகையான தொற்று நோயாக இருந்தாலும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த வகையான கொரோனா வைரஸாக இருந்தாலும், சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.
மேலும் ஊரடங்கிற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, ‘தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு என்பது போன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்’ என்று தெரிவித்தார்.