தமிழகம் முழுவதும் நாளை (நாளை 31ம் தேதி) போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற உள்ளன. தமிழகத்தில் 43 ஆயிரத்து 51 மையங்களில் 5 வயதுக்கு உட்பட்ட சுமார் 70.26 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்படவுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அறிகுறிகளான சளி, இருமல், காய்ச்சல் ஆகியவை இருந்தால் போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்வதை தவிர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் போலியோ சொட்டு மருந்து மருத்துவமனைகளில் போட்டிருந்தாலும் மீண்டும் போட்டுக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் களத்தில் இருக்கும் எனவும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், டோல் பிளாசா ஆகிய இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 லட்சம் சுகாதார ஊழியர்கள் இந்த சொட்டு மருந்து முகாம்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே கொரோனா பாதிக்கப்பட்டு மீண்ட குழந்தைகள் போலியோ சொட்டு மருந்தை போட்டுக் கொள்ள தடை இல்லை என கூறப்பட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவதால் வரும் ஞாயிற்றுகிழமை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறாது என்பதும் குறிப்பிடத்தக்கது.