அடுத்த ஆண்டு துவக்கத்தில் தமிழக சட்டசபைக்கான பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் முன் கூட்டியே தனது தேர்தல் பிரச்சாரத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் துவங்கிவிட்டார். இதனிடையே டெல்டா மாவட்டங்களில் நிவர் புயல் காரணமாக நிறுத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரத்தை நாளை முதல் மீண்டும் துவங்க உதயநிதி திட்டமிட்டுள்ளார். அதன்படி சூராவளியாக பிரச்சாரத்தை துவங்கும் அவர், நாளை ஓரிரவு மட்டும் அதிரையில் மையம் கொள்ள முடிவு செய்திருக்கிறார்.
அப்போது பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி திமுக முக்கிய புள்ளிகளை சந்தித்து இம்முறை பட்டுக்கோட்டை தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கலாமா? அல்லது திமுக வசம் வைத்துக்கொள்ளலாமா என்பது குறித்து ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த பொதுத் தேர்தலின்போது திமுக கூட்டணியில் அங்கம்வகித்து பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ், 12358 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவிடம் தோல்வியடைந்தது.
இந்தசூழலில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏனாதி பாலசுப்பிரமணியன் தஞ்சை திமுக தெற்கு மாவட்ட (பட்டுக்கோட்டை, பேராவூரணி சட்டமன்ற தொகுதிகள்) பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பதால் அவர் தனக்கு அல்லது தனது ஆதரவாளருக்கு பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியை தலைமையிடம் கேட்டு பெறுவார் என கூறப்படுகிறது.
முன்னதாக 1996 சட்டமன்ற தேர்தலில் 33621 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற ஏனாதி பாலசுப்பிரமணியன், 2001ஆம் ஆண்டு தேர்தலின்போது தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட என்.ஆர்.ரெங்கராஜனிடம் வெறும் 6950 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.