நிவர் புயல் எதிரொலியாக தமிழகத்தின் 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயலால் நாளை வரை கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் சென்னை, செங்கல்பட்டு, கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
நிவர் புயல் இன்று மாலைக்குள் அதி தீவிர புயலாக மாறும். இதனால் நாளையும் சென்னை, கடலூர், செங்கல்பட்டு, புதுச்சேரி, காரைக்கால், திருவண்ணாமலை, திருவாரூர், நாகை, தஞ்சை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை தொடரும்.
இதனால் பொதுமக்களின் நலன் கருதி இந்த விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது. அது போல் இன்றைய தினம் தமிழகம் முழுவதும் பொது விடுமறையை முதல்வர் அறிவித்திருந்தார். இந்த புயலால் 155 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புயல் கரையை கடப்பதற்கு முன்பே ஆங்காங்கே வீடுகளை வெள்ளம் சூழ்ந்து மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க சென்னையில் காலை முதலே பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் இல்லை. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருக்க செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
மக்களும் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, விழுப்புரம் வழியாக திருச்சி, மதுரை, நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கும் போக்குவரத்து நேற்று முதலே ரத்து செய்யப்பட்டுள்ளது.