தமிழகத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய போதுமான கொள்முதல் நிலையங்கள் இல்லை என்றும், எனவே, போதுமான நெல் கொள்முதல் நிலையங்களை அதிகரிக்க உத்தரவிடக்கோரி சென்னையைச் சேர்ந்த சூரிய பிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதி மன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன் மற்றும் புகழேந்தி அமர்வு, வழக்கு குறித்து தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
விசாரணையின் போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நிர்வாக இயக்குநர் ராதாதேவி தாக்கல் செய்த பதில் மனுவில், நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்கள் என்பது தவறான தகவல் என்று தெரிவித்திருந்தார்.
முறைகேட்டில் ஈடுபட்ட 105 அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது போன்ற தவறான தகவலை தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றனர்.
மேலும், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு ஏன் தூக்கு தண்டனை விதிக்கக் கூடாது? என்றும், அத்தகைய தண்டனை விதிக்கப்பட்டால் தான் குற்றங்கள் குறையும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.மேலும், இந்த வழக்கின் எதிர் மனுதாரராக வேளாண் துறை செயலாளரை சேர்க்க உத்தரவிட்டனர்.
வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 9 -ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.