கொரோனா வைரஸ் உலக மக்களை அச்சுறுத்திவரும்வேளையில் தமிழகத்தில் அதன்தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஊர், ஊராக சென்று ஜோசியம் பார்க்கும் தொழில் செய்துவரும் ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடியைச் சேர்ந்த பாபு என்பவர் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திற்கு தனது 8 வயது மகள் நாடியம்மாளை அழைத்துக்கொண்டு நேற்று வந்தார். அப்போது தனக்கு பாத்ரூம் வந்த காரணத்தினால் குழந்தையை பாத்ரூம் வெளியே நிறுத்திவிட்டு பாத்ரூம் சென்றுவிட்டுவந்து
பார்க்கும்போது மகளை காணவில்லை. இதனால்
அதிர்ச்சியடைந்த பாபு பேருந்து நிலையம் பகுதியில் அழுதுகொண்டே தனது மகளை தேடிக் கொண்டிருந்தார். அப்போது பேருந்துநிலையத்தில் நின்று கொண்டிருந்த பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் விக்னேஷ், பகுருதீன், அஜீஸ் ஆகிய 3 பேர் பாபுவை பார்த்து ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டனர்.
அதற்கு என் மகளை காணவில்லை என்று அவர் கூறினார். உடனே அந்த இளைஞர்கள் இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துவிட்டு நாமும் தேடினால் என்ன என்ற ஒரு எண்ணத்தில் பேருந்து நிலையம் அருகில் உள்ள கடைகளிலிருந்த சி.சி.டி.வி. கேமராவில் உள்ள பதிவுகளை பார்த்தனர். அதில் ஒருவர் அந்த குழந்தையை கூட்டிச் செல்வது தெரியவந்தது. உடனே அந்த காட்சிகளை அப்படியே எடுத்து தனது நண்பர்களுக்கு வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் பதிவு செய்தனர். இதை பார்த்த நண்பர் ஒருவர் மன்னார்குடியில் குழந்தையை பார்த்ததாக கூறினார். உடனே அங்கு சென்று பார்க்கையில், குழந்தை இல்லை. குழந்தையை அழைத்துக் சென்றவர் மட்டும் நின்றார். அவரிடம் விசாரித்தபோது, நான் குழந்தையை முத்துப்பேட்டைக்கு அழைத்துச் சென்றேன் அங்கு காணாமல் போய்விட்டது என்று கூறினார்.
உடனே குழந்தையின் தந்தையையும், அழைத்துச்
சென்றவரையும் பேருந்தில் முத்துப்பேட்டைக்கு வரச்சொல்லிவிட்டு இளைஞர்கள் 3 பேரும் 2 பைக்கில் முத்துப்பேட்டைக்கு சென்றனர். ஆனால் முத்துப்பேட்டை வருவதற்கு சுமார் 6 கிலோ மீட்டர் முன்பாகவே குழந்தையை அழைத்துச் சென்றவர்
பேருந்தில் கூட்டம் அதிகம் இருந்ததை பயன்படுத்தி, பேருந்தைவிட்டு இறங்கி ஓடிவிட்டார். குழந்தையின் தந்தை மட்டும் முத்துப்பேட்டை பேருந்து நிலையத்திற்கு வந்தார். உடனே அந்த பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது முத்துப்பேட்டை அருகே உள்ள நறுமணஞ்சேரி என்ற கிராமத்தில் ஜோசியம் பார்க்கும் ஒருவரது வீட்டில் குழந்தை இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற இளைஞர்கள் சிறுமியை பத்திரமாகமீட்டு இன்று அவரது அப்பாவிடம் ஒப்படைத்தனர்.