நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிப்ரவரி மாதம் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும், மார்ச் மாதம் 10-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் தொடங்கியது. இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது அந்த ஒத்திவைக்கப்பட்ட 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளை ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை நடத்த சிபிஎஸ்இ முன்பு திட்டமிட்டிருந்தது.
இதனிடையே தற்போதைய சூழ்நிலையில் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி ஒரு மாணவரின் பெற்றோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் மீதமுள்ள தாள்களைத் ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கவும், இன்டர்னல் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கவும் அறிவுறுத்தியது.
இந்நிலையில் சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, உச்சநீதிமன்றத்தில் இன்று ஒரு அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில் ஊரடங்கால் சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்த முடியாது என தமிழகம், ஒடிஸா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் எங்களிடம் தெரிவித்துள்ளன. அது போல் மற்ற மாநில அரசுகளிடம் இருந்தும் கருத்துகளை பெற்ற நிலையில் சிபிஎஸ்இ 10, 12 தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்ய முடிவு செய்யப்படுகிறது என மத்திய அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.