இந்தியா முழுவதும் கோடைக்காலத்தில் ஐபிஎல் தொடர் ஒட்டுமொத்த மக்களையும் கட்டிப்போட்டிருக்கும். நடப்பாண்டு கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் தள்ளி வைத்துள்ளது ரசிகர்களுக்கு எந்தளவிற்கு சோகமோ, அதைவிட, ஐபிஎல்-யை நம்பி பிழைப்பை ஓட்டும் காப்ளர்களின் அன்றாட நிலையும் கேள்விக்குறியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரின் போது, வீரர்களின் கிரிக்கெட் உபகரணங்கள் சேதமடைந்தால் அதனை சரி செய்து கொடுக்கும் காப்ளர்கள், ஐபிஎல் நடக்காததால் இந்த ஊரடங்கில் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த சூழலில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் அதிகாரப்பூர்வ காப்ளராக இருப்பவர் பாஸ்கர். இவரது தனித்துவமான வேலைப்பாடுகள் மூலம் சச்சின், தோனி போன்றவர்கள் இவருக்கு அருகில் உட்கார்ந்து தங்களுக்கான உதவியை கேட்டுப்பெறுவார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக காப்ளர் பாஸ்கரன் வாழ்வாதாரமின்றி தவித்து வந்துள்ளார்.
இதனை அறிந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் காப்ளர் பாஸ்கருக்கு 25,000 ரூபாய் நிதி உதவி அளித்ததோடு, அவரது குடும்பத்திற்கு தேவையான பொருட்களையும் வாங்கி கொடுத்து உதவியுள்ளார்.
சி.எஸ்.கே அணி மீதான தடையால் (2016, 17) சென்னையில் 2 ஆண்டுகள் ஐபிஎல் தொடர் இல்லாமல் போனது தனக்கு மிகவும் கடினமான காலம் எனவும், 2 ஆண்டு இடைவெளிக்கு பின் ஐபிஎல் வந்த போது, காவிரி தண்ணீர் பிரச்சனை விஸ்வரூபமெடுத்து, ஐபிஎல் தொடர் நடக்க மீண்டும் தடையாக இருந்ததாகவும் நினைவு கூர்ந்தார்.
ஒவ்வொரு சிஎஸ்கே போட்டியின் போதும், தான் ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிப்பதாகவும், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதியில் இருபத்தைந்தாயிரம் வரை சம்பாதித்ததாகவும் தெரிவித்தார்.
நன்றி : நியூஸ்18 தமிழ்நாடு