அதிரையர்களின் இணையத்துடிப்பான அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகம் 13 ஆண்டுகளை கடந்து 14-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வறுகின்றனர். இந்நிலையில் நாகை சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளருமான மு. தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ அதிரை எக்ஸ்பிரசிற்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
அன்புக்குரிய அதிரை உறவுகள் அனைவர் மீது ஏக இறைவனின் அமைதியும், ஆசியும் உரித்தாகுக!
அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம் 13 ஆம் ஆண்டில் களம் புகுவது அறிந்து மகிழ்கிறேன். மனமுவந்து வாழ்த்துகிறேன்.
அதிராம்பட்டினம் என் மண்வாசனையோடு தொடர்புடைய பூமி என்பதால், எனக்கு இயல்பான உறவுகளும், தோழமைகளும் அங்கு நிறைய உண்டு.
பாராம்யமும், பண்பாடும், கலாச்சாரமும், விருந்தோம்பலும் அதிரையின் சிறப்புகளில் சில.அதில் அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளமும் ஒன்றாக இணைந்திருக்கிறது.
இன்று அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள், சமூக இணையதள ஊடகங்கள் என மூன்று வகையில் செய்தித் துறை வளர்ச்சியடைந்துள்ளது.
முன்பு அச்சு ஊடகங்கள் நடத்தியவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.கடனில் மூழ்கினர். அதில் வென்றவர்கள் மிகவும் குறைவு.
காட்சி ஊடகங்கள் என்பது கார்ப்பரேட்டுகளின் கரங்களுக்கு போய் விட்டது.
இச்சூழலில் சாமனியர்களின் குரலை சமூக இணைய தளங்களே எதிரொலிக்கின்றன.
அவைதான் கருத்துரிமையை ஜனநாயகப்படுத்தியுள்ளன.
இன்று மக்களிடம் உடனுக்குடன் செய்திகளை பரிமாறுவது சமூக இணைய தளங்கள் தான்.
சில நேரம் இவை ஏற்படுத்தும் தாக்கங்கள் அச்சு ஊடகங்களையும், காட்சி ஊடகங்களையும் அதே திசையை நோக்கி திருப்புகின்றன என்பதே உண்மை.
அந்த வகையில் உலகமெங்கும் பரந்து விரிந்து வாழும் அதிராம்பட்டினம் மக்களை இணைக்கும் ஒரு செய்தி தளமாக ; கடந்த 13 ஆண்டுகளாக அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம் இயங்கி வருவது பாராட்டுக்குரியது.
கடல் கடந்து வாழ்ந்தாலும், இதை பார்க்கின்றப் போது ஊரோடு உலா போவது போன்ற உணர்வுகளை தரும்.
ஊர் சார்ந்த இணைய தளங்களின் சிறப்பே அது தான்.
அந்த வகையில்,அதிரையின் இளநீரைப் பருகி மகிழும் இன்பத்தை போல, அதிரை எக்ஸ்பிரஸ் செய்திகளை தருகிறது என்பது உண்மை.
இது படிப்படியாக பரிணாம வளர்ச்சியை பெற்று உச்சம் தொட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வாழ்த்துகிறோம்.
வாழ்த்துக்களுடன்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி