கேரளாவில் 3 வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இத்தாலியில் இருந்து துபாய் வழியாக 3 வயது குழந்தை கொச்சி விமான நிலையம் வந்துள்ளது. அக்குழந்தைக்கு அங்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதை மருத்துவ குழுவினர் உறுதிசெய்துள்ளனர். குழந்தையின் தாயும், தந்தையும் எர்ணாகுளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கண்காணிப்பில் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பத்தினம்திட்டா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனால் தற்போது கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். எனினும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்படாது எனவும், வழக்கல் போல நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.