அதிராம்பட்டினம் கீழத்தெருவை சேர்ந்தவர் ஹமீது. கூலி தொழிலாளியான இவர் நடுத்தெருவின் மேற்கு பகுதியில் உள்ள குடிசை வீட்டில் வாடகைக்கு குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இவரின் வீட்டிற்கு அருகாமையில் இடியாப்பம் தொழில் செய்யும் பெண்மணியின் வீடும் இருந்துள்ளது . இந்நிலையில் இடியாப்பம் விற்கும் பெண்மணி வீட்டில் இல்லாதபோது, அவரின் குடிசை வீடு மதியம் சுமார் 3 மணியளவில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென பரவி அருகில் உள்ள ஹமீதின் வீட்டிற்கு பரவியது. இதில் ஹமீதின் வீட்டில் இருந்த இரண்டு பவுன் தங்க மோதிரமும், 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணமும் எரிந்து சாம்பலானது. இதனையடுத்து தீயணைப்பு வாகனம் வருவதற்குள், அப்பகுதி இளைஞர்களே தீயை அணைத்தனர். இருப்பினும் கொழுந்துவிட்டு எரிந்த தீயால் இரண்டு வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாகின.
அதிரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. அவ்வாறு ஏற்படும் தீயை அணைக்க பட்டுக்கோட்டையிலிருந்தே தீயணைப்பு வாகனம் வரவேண்டியுள்ளது. தொலைதூரத்தில் இருந்து தீயணைப்பு வாகனம் வருவதற்குள், தீ முழுமையாக பற்றி அதிகமான சேதம் ஏற்பட்டு வருகின்றது.
எனவே மக்கள் தொகை அதிகம் உள்ள அதிரையில் தனியாக தீயணைப்பு நிலையம் அமைக்க பட்டுக்கோட்டை தொகுதி எம்எல்ஏ வர இருக்கின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பி, அதிரையில் தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அதிரை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களின் எதிர்பார்ப்பாகவும், நீண்ட நாள் கோரிக்கையாகவும் உள்ளது.