காரைக்குடி-திருவாரூர் இடையிலான அகல ரயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டு கடந்த மாதம் அதிவேக ரயில் சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. இவ்வழித்தடத்தில் பயணிகள் ரயில் போக்குவரத்தை உடனே துவங்க வேண்டும் என பொதுமக்களும், ரயில் பயணிகள் நலச்சங்கத்தினரும், அரசியல் பிரமுகர்களும் ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் காரைக்குடி-திருவாரூர் இடையே தினசரி சிறப்பு டெமு பயணிகள் ரயில்சேவை வருகிற ஜூன் 1ம் தேதி துவங்கப்பட உள்ளது.
திருவாரூரிலிருந்து காலை 8.15 மணிக்கு புறப்படும் ரயில் பிற்பகல் 2.15 மணிக்கு காரைகுடியை வந்தடையும். மறுமார்க்கமாக காரைக்குடியிலிருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 8.30 மணிக்கு திருவாரூர் வந்தடையும்.
வாரத்தில் 6 நாட்கள் இந்த பயணிகள் ரயில் சேவை நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் பராமரிப்பு பணிக்காக ரயில், திருச்சி சென்று வரும். இந்த ரயில் சேவை ஜூன் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த பயணிகள் சிறப்பு ரயிலானது மாங்குடி, மாவூர் ரோடு, திருநெல்லிக்காவல், அம்மனூர், அட்டம்பாடி, மணலி, திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், ஒட்டங்காடு, பேராவூரணி, ஆயங்குடி, அறந்தாங்கி, வளரமானிக்கம், பெரியகோட்டை, கண்டனூர் புதுவயல் ஆகிய ஊர்களில் 1 நிமிடம் நின்று செல்லும். பட்டுக்கோட்டையில் மட்டும் 2 நிமிடங்கள் நின்று செல்லும்.
பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் நீண்ட நாள் கோரிக்கையான திருவாரூர்-காரைக்குடி ரயில் சேவை தொடங்க உள்ளது இப்பகுதி மக்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.