தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் காலையில் கேதார்நாத் சென்ற பிரதமர், பாரம்பரிய உடை அணிந்து கோவிலில் வழிபட்டார்.
பின்னர் கேதார்நாத் குகைக்கோவிலில் தியானத்தில் ஈடுபட்டார். புனித குகைக்கோவிலில் அமர்ந்து பிரதமர் மோடி விடிய விடிய தியானம் செய்தார். இரவு முழுவதும் தியானம் செய்த நிலையில் இன்று காலையில் பத்ரினாத்துக்கு புறப்பட்டார்.
இந்நிலையில் பிரதமர் மோடி தியானம் செய்த குகைக்கு வழங்கப்பட்ட வசதிகள் குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி பிரதமர் மோடி தியானம் செய்த குகையானது இயற்கையானது அல்ல. அது பாறைகளை வெட்டி பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட குகை. அந்த குகையை ஒட்டி 10 அடி உயர கூரை கொண்ட சிறிய கழிவறை அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய அந்த இடத்தை வடிவமைத்த அதிகாரி ஒருவர், பிரதமரின் வருகைக்காக இந்த குகை முன்னதாகவே உருவாக்கப்பட்டது, மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இந்த குகை கடந்த வருடமே உருவாக்கப்பட்டு பூட்டி வைக்கப்பட்டது. மேலும் பிரதமரின் வருகையை அடுத்து குகை முழுவதும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டது.
குகை குறித்து பேசிய மற்றொரு அதிகாரி, தியானம் செய்ய ஒரு பரந்த இடமும், குகையுடன் கூடிய ஒரு படுக்கை கொண்ட ஓர் அறையும் உண்டு என தெரிவித்துள்ளார்.