அதிராம்பட்டினத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கடைகளில் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக தொடர் புகார்கள் வந்துகொண்டே இருந்தன. இதுதொடர்பாக பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து அதிரை எக்ஸ்பிரஸில் செய்தி வெளியிட்டு வந்தோம்.
இந்நிலையில் இன்று வியாழக்கிழமை அதிரையிள் உள்ள கடைகளில் பேரூராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் அன்பரசன் தலைமையில் சுகாதார பார்வையாளர் வெங்கடேஷ் மற்றும் பணியாளர்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது கட்டுக்கட்டாக பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சுமார் 38 கடைகளில் நடைபெற்ற ஆய்வில் 26 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பிளாஸ்டிக் பயன்படுத்தியதற்காக 4500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இனி வரும் காலங்களில் அதிரையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதற்காக சிறப்பு நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.