சென்னையில் இன்று அதிகாலை பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. மத்திய மேற்கு வங்க கடலில் காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி நேற்று காலை முதலே சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இன்று அதிகாலை கனமழை கொட்டியது.
வண்டலூர், பெருங்களத்தூர், பம்மல், தாம்பரம், வேளச்சேரி, கிண்டி, மூலக்கடை, ஈக்காட்டுதாங்கல், முகப்பேர், பேரூர், மடிப்பாக்கம், மதுரவாயல், ஆதம்பாக்கம், நுங்கம்பாக்கம், சிட்லபாக்கம், ஈஞ்சம்பாக்கம், கத்திப்பாரா, வடபழனி உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்தது. கனமழையால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இன்று அதிகாலை பயங்கரமாக இடி சப்தம் கேட்டது. இதனால் மக்கள் பீதியில் உறைந்தனர். அதிகபட்சமாக எண்ணூரில் 133 மி.மீரும், மீஞ்சூரில் 126 மி.மீரும், செங்குன்றத்தில் 101 மி.மீரும் மழை பெய்துள்ளது.