இந்தியாவில் முதல்முறையாக திருச்சி விமான நிலையத்திற்கு ரூ.4.64 கோடியில் சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் வழங்கும் செயல்பாடு துவக்க விழா நேற்று நடந்தது. மேலும் ரூ.30 லட்சத்தில் அரசு மருத்துவக்கல்லூரிக்கு ஆம்புலன்களும் வழங்கப்பட்டன. திருச்சி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தியதிலிருந்து, விமான நிலையத்திற்கு விரிவாக்க பணிகளும், பராமரிப்பு பணிகளும் நடந்து வருகின்றன. மற்றொரு புதிய முனையம் அமைப்பதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன.
இங்கிருந்து துபாய், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்களும், வெளிநாடுகளில் இருந்து விமானங்களும் அதிக அளவில் வந்து செல்கின்றன. இன்னும் அதிக விமானங்கள் இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு இயக்கப்படும் என்று விமான நிலைய நிர்வாகமும், மத்திய அரசும் ஏற்கனவே தெரிவித்து இருந்தன.
இந்நிலையில் இந்தியாவிலேயே முதல் முறையாக விமான நிலைய மின்சார தேவைகளுக்காகவும் விரிவாக்கப்பணி தேவைகளுக்காகவும் ரூ.4 கோடியே 64 லட்சம் மதிப்பீட்டில் சோலார் பேனல்கள் அமைக்கும் பணி நடந்து முடிந்துள்ளது. இதிலிருந்து ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
இந்த மின்சாரம் தற்போதைக்கு போதிய மின்சாரமாகவும், இன்னும் வருங்காலங்களில் விமான நிலையம் விரிவுபடுத்தும்போது அதிக மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என விமான நிலைய இயக்குனர் குணசேகரன் தெரிவித்தார். இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கென ரூ.4 கோடியே 64 லட்சம் மதிப்பீட்டில் 1 மெகா வாட் சோலார் மின்சார செயல்பாட்டை விமான நிலைய ஆணைய குழும மனித வள மேம்பாட்டு உறுப்பினர் அனுஜ் அகர்வால் நேற்று துவக்கி வைத்தார். இதன் மூலம் வருடத்திற்கு 25 சதவிகித மின்சார தேவை பூர்த்தி செய்யப்படும் எனவும், 1 கோடியே 23 லட்ச ரூபாய் சேமிப்பாகும் எனவும், இந்த சோலார் பேனல் அமைக்க செலவிடப்பட்ட தொகையை 3 ஆண்டுகள் 9 மாதங்களில் திரும்ப பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியை தொடர்ந்து இந்திய விமான நிலைய ஆணைய குழுமம் சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் திருச்சி கி.ஆ.பெ. அரசு மருத்துவ கல்லூரிக்கு 2 ஆம்புலன்ஸ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விமான நிலைய ஆணைய குழும மனிதவள மேம்பாட்டு உறுப்பினர் அனுஜ் அகர்வால் மற்றும் மண்டல செயல் இயக்குனர் ஸ்ரீகுமார் ஆகியோர், அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாரதாவிடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஆம்புலன்ஸ்களின் சாவிகளை ஒப்படைத்தனர். நிகழ்ச்சியில் துணை பொது மேலாளர் ஜோஷி பிரான்சிஸ் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.