தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
ஆங்காங்கே பல கட்சிகள் ஒவ்வொரு தொகுதியாக சென்று அனல் பறக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக பாமக இளைஞரணித் தலைவரும், தர்மபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், தர்மபுரி தொகுதியில் போட்டியிடுகிறார்.
தர்மபுரி, மேச்சேரிக்கு சென்று பிரச்சாரம் செய்தார். அப்போது மேடைக்கு அருகே வந்த தங்கராஜ் என்ற அதிமுக தொண்டர்,
‘ஐயா, கடந்த முறை இங்கதான் நின்னு ஜெயிச்சீங்க. அதுக்கு அப்புறம் எங்க போனீங்க. 5 வருஷமா எங்க இருந்தீங்க. 8 வழிச் சாலைக்கு எதிராக மக்கள் போராடியபோது எங்க போனீங்க ஐயா’ என்று கேள்வி எழுப்பினார். அவர் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் போதே அதிமுக MLA செம்மலை தொண்டரின் வாயில் அடித்தார்.
ஒருபுறம் காவலர்கள் அவரை இழுத்துச் செல்ல, மறுபுறம் கட்சியை சேர்ந்தவர்கள் தங்கராஜை அடித்தனர்.
இதனால் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்ததையடுத்து அன்புமணி ராமதாஸ் தனது பிரச்சாரத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு சென்றார்.