திருவாரூர்-காரைக்குடி ரயில் வழித்தடத்தில் சென்னைக்கு விரைவு ரயில் சேவை துவங்க வேண்டும் என பட்டுக்கோட்டை எம்எல்ஏ தலைமையில், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி. சேகர் தலைமையில் பட்டுக்கோட்டை ரயில் பயணிகள் சங்கத்தினர், பட்டுக்கோட்டை அனைத்து ஜமாத்தார்கள், தஞ்சை மாவட்ட போட்டோ மற்றும் வீடியோ கலைஞர்கள் சங்கத்தினர், பட்டுக்கோட்டை பைத்துல்மால் நிர்வாகிகள், பட்டுக்கோட்டை ரோட்டரி சங்கத்தினர் ஆகியோர் தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மேலாளர் ஏ. உதயகுமார்ரெட்டியை இன்று 11.03.2019 திங்கட்கிழமை காலை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
அக்கோரிக்கை மனுவில், காரை க்குடியிலிருந்து சென்னைக்கு விரைவு ரயில் சேவை வசதியினை செய்து தர வேண்டும் மற்றும் பட்டுக்கோட்டை அண்ணா நகரில் உள்ள லெவல் கிராசிங் கேட் எல்.சி. 94க்கு தரைவழிப்பாலம் அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் ஏ. உதயகுமார்ரெட்டி, சென்னையிலிருந்து இராமேஸ்வரத்திற்கு இந்த ரயில் தடத்தில் இரண்டு மாதத்திற்குள் விரைவு ரயில் இயக்க திட்டமிட்டு வருவதாகவும், பட்டுக்கோட்டை அண்ணா நகரில் எல்.சி. 94 தரைவழிப்பாதை அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கப்படும் என்றும் தெரிவித்தார்.