தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. தேமுதிக எந்த கூட்டணியில் இணையும் என்பது சஸ்பென்சாக இருக்கிறது. அதிமுகவுடன்கூட்டணி சேருமா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்காமல் விஜயகாந்த் உள்ளார்.
இந்நிலையில் லோக்சபா கூட்டணி தொடர்பாக தேமுதிக உடன் ரகசிய பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கே.பி.முனுசாமி கூறியிருக்கிறார். காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் பகுதியில் ஜெயலலிதா பிறந்த நாளில் பிறந்த 10 குழந்தைக்கு தங்க மோதிரங்களை அவர் வழங்கினார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: துரோகம் செய்து அரசியலுக்கு வந்தவர் டிடிவி தினகரன், எனவே அவரை மக்களும் ஏற்றுக்கொள்ளமாட்டனர். அவருக்கு அரசியல் எதிர்காலமும் இல்லை.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, சூழ்நிலைகள் சரியில்லாததால் பிரதமர் மோடியால் பார்வையிட முடியாமல் போனது. இருப்பினும் பிரதமரின் உத்தரவின் பேரில் முதல்வரும், துணை முதல்வரும் பார்வையிட்டு பிரதமரிடம் எடுத்துரைத்தனர்.
வைகோ என்பவர் ஏதோ ஒரு பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டு போராட்டம் நடத்தி வருகிறார். போராட்டத்தின் முக்கியம் என்னவென்று ஆராயாமலே போராட்டம் நடத்தி வருகிறார்.
பிரதமருக்கு கருப்பு கொடி காட்டுவது தேவையில்லாத ஒன்று. தேமுதிக உடனான பேச்சுவார்த்தை ரகசியமாக நடைபெற்று வருகிறது என்று கூறினார்.