காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய ரிசர்வ் படை வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 42 வீரர்கள் உயிரிழந்தார்கள். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு இயக்கமான ஜெய்ஸ்-இ-முகமது பொறுப்பேற்றது.
ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நடந்த இந்தத் தாக்குதலுக்கு பாதுகாப்பு குறைவின்மையே முக்கிய காரணம் என முன்னாள் உளவுத்துறை தலைவர் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், தேர்தல் நேரத்தில் ‘தேசபக்தி’ போர்வையில் இந்த சம்பவத்தை தன்னுடைய கீழ்த்தரமான அரசியலுக்கு பயன்படுத்தி வருகிறது இந்துத்துவ கும்பல்.
இந்தியாவின் பல இடங்களில் இந்தத் தாக்குதல் சம்பவத்தை வைத்து, முஸ்லீம் வெறுப்பு அரசியலை அவிழ்த்து விட்டுள்ளது சங்கபரிவார கும்பல். டெல்லி சிறுபான்மையினர் ஆணையர் சஃபாருல் இஸ்லாம் கான், டெல்லி போலீஸ் கமிஷனருக்கு எழுதியுள்ள கடிதத்தில், புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் காஷ்மீரிகள் மீது, முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக எழுதியுள்ளார்.
டெல்லியில்கூட கலவரத்தைத் தூண்டும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் பிரச்சினைகள் ஏற்பட வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு போராட்டங்கள் நடைபெறுவதாகவும் அந்தக் கடிதத்தில் அவர் சுட்டிக் காட்டுகிறார்.
“முஸ்லீம்கள் வாழும் பகுதிகளிலும் அனைத்து சமூகத்தினருடன் கலந்து வாழும் பகுதிகளில் உள்ள முஸ்லீம் வீடுகளின் முன்பும், ஆத்திர மூட்டும் வகையிலான முழக்கங்களை இந்துத்துவ கும்பல் எழுப்புகிறது. எனவே, உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை எடுங்கள். இல்லாவிட்டால், ஜம்முவில் நடப்பதைப்போல இங்கேயும் கலவரங்கள் நடக்கும். எந்த விலை கொடுத்தாவது அமைதி, நல்லுறவு நீடித்திருக்க டெல்லியில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்துங்கள்.” என சிறுபான்மையின ஆணையர் எழுதியுள்ளார்.
நாட்டின் சில இடங்களில் இந்துத்துவ கும்பல் தாக்குதலையும் நடத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை பீகார் மாநிலம் பாட்னா அருகே காஷ்மீரி பஜார் பகுதியில் வசிக்கும் காஷ்மீரிகளை இந்த கும்பல் அடித்துள்ளது. இந்தப் பகுதியில் கடை வைத்திருக்கும் 40-க்கும் மேற்பட்ட காஷ்மீரிகள் கடையை காலிசெய்துவிட்டு, ஊர் திரும்ப முடிவெடுத்துள்ளனர்.
ஹரியானா பல்கலைக்கழகத்தில் பயிலும் காஷ்மீரி மாணவர்கள், தங்குமிடங்களிலேயே கதவுகளை பூட்டிக்கொண்டு உள்ளேயே இருப்பதாக பத்திரிகையாளர் ஃபகத் ஷா தெரிவிக்கிறார்.
ஜம்மு கடந்த மூன்று நாட்களாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்துத்துவ கும்பல் தெருக்களில் நிறுத்தப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட வாகனங்களை கொளுத்தியது, கட்டுப்படுத்த முடியாமல் வன்முறை சம்பவங்கள் நடந்துவருகின்ற நிலையில், அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத தாக்குதலில் எந்தவித தொடர்பும் இல்லாத தங்கள் மீதும் எப்போதும் தாக்குதல் நடத்தப்படுவதாக காஷ்மீரைச் சேர்ந்த வாகன ஓட்டுநர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.