மக்களின் போன் மற்றும் கணினிகளை கண்காணிக்க மத்திய அரசு 10 அமைப்புகளுக்கு அனுமதி வழங்கியது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும், செல்போன்களையும் கண்காணிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய அரசு மற்றும் அரசு சாரா 10 அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை நேற்றுதான் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்தது.
மத்திய அரசு 10 அமைப்புகளுக்கு இந்த அனுமதியை வழங்கி உள்ளது.
1. சிபிஐ
2.உளவுத்துறை
3.அமலாக்க துறை
4.மத்திய நேரடி வரிகள் வாரியம்
5.வருவாய் புலனாய்வு இயக்குநரகம்
6.தேசிய புலனாய்வு அமைப்பு
7.ரா
8.சிக்னல் புலனாய்வு இயக்குநரகம்
9.டெல்லி கமிஷ்னர் அலுவலகம்
10. போதை பொருள் தடுப்பு பிரிவு
மத்திய அரசு வழங்கி இருக்கும் புதிய அனுமதியின் மூலம் மக்கள் அவர்களுக்கு தெரியாமலே கண்காணிக்கப்படுவார்கள். மத்திய அரசு வழங்கி இருக்கும் அனுமதி ஆணையில் ”இன்டர்செப்ட் மற்றும் மானிட்டர்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நம்முடைய கணினியை நமக்கே தெரியாமல் அரசு இயக்க முடியும். போன்களையும் கூட அரசு இப்படி இயக்க முடியும்.
இந்த அமைப்புகளால் நம்முடைய லேப்டாப்பில் உள்ள புகைப்படங்களை சோதனை செய்ய முடியும், நம்முடைய போன்களில் உள்ள மெயில்களை படிக்க முடியும், ஆவணங்களை சோதனை செய்ய முடியும், நாம் எங்கே செல்கிறோம் என்று ஜிபிஎஸ் மூலம் சோதனை செய்ய முடியும். அதாவது ஹாலிவுட் படங்களில் வருவது போல அரசு நினைத்ததை எல்லாம் இனி செய்ய முடியும்.
இதில் யாருக்கு எல்லாம் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று அரசு விளக்கவில்லை. இப்போதுவரை வந்துள்ள ஆணையின்படி ராகுல் காந்தி தொடங்கி மு.க ஸ்டாலின் வரை யாருடைய கணினியையும் இந்த 10 அமைப்புகள் கண்காணிக்க முடியும். இதனால் சாதாரண எளிய மக்களும் அரசின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளனர்.
இது மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்த தகவல்கள் தவறாக எங்காவது வெளியே செல்லவும் வாய்ப்புள்ளது. அதேபோல் நம்முடைய தனிப்பட்ட அந்தரங்கமும் இதனால் பறிபோக வாய்ப்புள்ளது. இதற்கு எதிராக மக்கள் இப்போதுதான் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.